Monday, March 14, 2005

உயிர் பல்வகைமை பேணல் 1.மா வருக்கங்கள்

நாட்டு மா வருக்கங்களை காப்போம்

உயிர் பல்வகைமை எனும் பதத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள.; சாதாரணமாக சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட அலகு பரப்பில் காணப்படும் வேறுபட்ட அங்கிகளின் எண்ணிக்கை அல்லது வீச்சு எனலாம். இதை உதாரணம் முலம் பார்ப்போம்ஒரு சிறிய பராமரிப்பற்ற காணியை எடுத்து கொள்ளுங்கள். அங்கு வேறுபட்ட புற்கள் கொடிகள் செடிகள் பல்வேறு மரங்கள் சிறு விலங்குகள் என காணப்படமுடியும்.ஆனால் ஒரு தேயிலைப் பெருந்தோட்டத்தில் தேயிலையை தவிர பிற மரங்களை காணபது அரிது. அதாவது அங்கு உயிரியல் பல்வகைமை அரிது எனலாம். இப்பல்வகைமையானது குறிப்பிட்ட ஒரு இனத்துக்குள்ளும் காணப்படமுடியும். ஊதாரணமாக மனிதரிடையே ஆபிரிக்கர் தென்னாசியர் அரபியர் சீனர் என வேறுபடுவது போல்.
நாம் இங்கு இப்பத்தியில் எடுத்தாள விரும்புவது மா இனத்தில் காணப்படும் இன பல்வகைமை பற்றியும் அதன் அழிவுக்குள்ளாகிவரும் ஆதியான வருக்கங்கள் பற்றியுமாகும்.
நமக்கு தெரிந்த பயிர் செய்கையில் நாட்டப்படும் மா இனங்கள்

1.கறுத்த கொழும்பான்
2.வெள்ளைக் கொழும்பான்
3.விலாட்டு
4.அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]
5.செம்பாட்டான்
6.சேலம்
7.பாண்டி
8.களைகட்டி
9.பச்சதின்னி
10.கொடி மா [ஊருக்கு புதியது தற்போது சில வீடுகளில் உண்டு சரியான பெயர் தெரியாது]
11.மத்தள காய்ச்சி [இதன் சரியான பெயர் தெரியாது நமது காணியில் இரண்டு நின்றது பெரிய காய் ஆனால் நார் அதிகம். இப்போது இரண்டும் தறித்தாகிவிட்டது.]

[இதில் சொல்லப்பட்டவை தமிழீழத்தில் ,இலங்கையில் காணப்படுபவை ]

இவற்றை விட நாட்டு மா என சொல்லப்படும் புளி மாக்கள் பல உண்டு
நாம் சிறுவனாய் இருந்த காலத்தில் ஆறுக்கு மேற் பட்ட புளி மாக்கள் நமது காணியில் நின்றன. அவற்றிற்கு நாம் வழங்கிய பெயர்கள்
வட்டக்காய்ச்சி
கட்டை மா
கறி மா [இதன் காய் தனியே மாங்காயில் கறிவைக்க நல்ல ருசி]
பெயரிடாத ஏனையவை 3.
தற்போது எஞ்சியுள்ளது மூன்று மட்டுமே.
இதே போல நம்மூரில் பலரது காணிகளில் பல தனித்துவமான நாட்டு புளி மாக்கள் இருந்தன. இப்போது பார்த்தல் ஊரில் விரல்விட்டு எண்ணக்கூடிய புளி மாக்களைத்தான் காணலாம்.புளிமாக்களின் காய்கள் கறிக்கும் சொதிக்கும் போடுவதோடு சரி. ஆனால் அவற்றின் விதைகளில் இருந்து பெறப்படும் நாற்றுக்கள் நல்ல வருக்கங்களை ஒட்டுவதற்கு ஒட்டுகட்டைகளாக பயன்படுத்துவார்கள். அதைவிட பெரிதாக பொருளாதார முக்கியத்துவம் அற்றிருப்பினும் உயிரியல் ரீதியில் முக்கியமானவை. அவை சூழலுக்கு வார்த்தகரீதியான வருக்கங்களிலும் அதிக இயைபாக்கமுடையவை. அவற்றின் இயலபுகள் பற்றி எவ்வித ஆர்வமும் எடுக்கப்படுவதில்லை. அவை காலப்போக்கில் முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்பதில் பெரிதாக ஐயமில்லை. அவை அழிக்கப்படுவதனால் உயிர்சூழலில் மீளப்பெறமுடியாத வகையில் பாரம்பரை [ஜீன்கள் ]அலகுகள் இழக்கப்படுகிறன.அவற்றை பேண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் தனியாருடைய காணியில் அவற்றை பேணுவது கடினம். வட்டக்கச்சியில் [விவசாய கண்கட்சி நடந்த பண்ணை யில் என நினைக்கிறேன்] நல்லின மாக்களுக்கு ஒட்டு கிளைகள் பெறுவதற்கு ஒரு பண்ணை போல நாட்டு மாவருக்கங்களை பேணுவதற்கும் ஒரு பண்ணை அமைத்து தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் நாட்டு மா வருக்கங்களை பேணவேண்டும்.இதை முளைய முதலுரு பாதுகாப்பு என்பர் [Germplasm conservation].
அதே போல பல தாவர இனங்கள் அருகிவருகிறன. அவற்றை அடையாளங்கண்டு பேணமுயற்சிப்பது அவசியம்.
நாம சின்ன பையனா இருந்த போது:
நறுவிலி இதன் பழத்தை சாப்பிட்டால் சொண்டு ஒட்டும் அத்துடன் அதிக தாகமெடுக்கும். ஊரில் ஓருமரம் இருந்தது தற்போது இருக்கோ இல்லையோ.
அதே போல கருநாவல் என்று பிஞ்சில் சிவப்பாக தண்ணி பிடிப்பான விதையுடனும் இருக்கும். பழம் நாவல் பழ நிறத்தில் தடித்த விதையுடன் கணப்படும் அரிவரி முடிஞ்சு வரேக்கை அதை பிடுங்கி சாப்பிட அடிபாடு வரும் இப்ப அந்த மரத்தை காணகிடைப்பதில்ல.

ஆகவே நம்ம நாட்டில இருக்கிற தாவர வருக்கங்களை பேண நடவடிக்கை எடுப்பது அத்தியவசியமானது.

4 Comments:

At March 14, 2005 2:36 pm, Blogger tamil said...

மாம்பழங்கள் பெயர்கள் எல்லாம் எழுதி ஏன் எச்சில் வடிக்க வைக்கிறீர்கள்...?
இணையத்தில் ஒலிக்கும் பாடல் அருமை.

 
At March 16, 2005 3:35 pm, Blogger ஜெயச்சந்திரன் said...

நம்ம நட்டில இன்னும் பல தாவர வருக்கங்கள் அழியும் கட்டத்திலுள்ளன காக்க வேண்டும்

 
At March 17, 2005 3:56 am, Blogger Chandravathanaa said...

நல்ல விடயங்களைப் பதிக்கிறீர்கள்.
மரங்கள் அருகுவதைப் போல அவை பற்றிய தகவல்களும் அருகி வருகின்றன.
இந்த நிலையில் உங்கள் பதிவு மிகவும் பயனானது. பாதுகாத்து வைக்கப் பட வேண்டியது.

ஆனால் மாங்காய் ஆசையைத்தான் ஊட்டி விட்டீர்கள். விலாட், கிளிச்சொண்டான் பாண்டி...
என்று.

 
At March 17, 2005 6:46 am, Blogger ஜெயச்சந்திரன் said...

அக்கா இத போல பலதும பகிர்ந்து கொள்ள ஆசை ஆனால் நேரத் தட்டுப்பாடு.......

 

Post a Comment

<< Home