Thursday, July 24, 2008

சோயா உணவு ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம்

சோயா உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம் என அண்மைய ஆராய்சிகள் தெரிவிக்கிறன.
சோயா உணவை உட்கொள்ளும் ஆண்களில் காணப்படும் விந்து கலங்களின் எண்ணிக்கை சோயா உணவை உட்கொள்ளாத ஆண்களிலும் குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 15 வகையான சோயா உணவுகளை கொடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சோயா உணவை உட்கொண்ட ஆண்கள் 41 மில்லியன் விந்து கலங்கள் / மில்லி லீற்றர் விந்து பாயத்தில் (திரவத்தில் )காணப்படுவதாகவும், இது பொதுவாக ஆண்களில் காணப்படும் சராசரி விந்து எண்ணிக்கையான 66 மில்லியன் விந்து கலங்கள்/ மில்லிலீற்றர் விந்து பாயத்திலும் கணிசமான அளவு குறைவாகும்.

சோயா உணவுகளில் உள்ள ஐசோ பிளேவோன்கள் (isoflavone)இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. சோயா உணவுகளில், மற்றும் சில தாவர உணவுகளில் காணப்படும் தாவர ஈஸ்ரோஜன் (phytoestrogens) பெண்களில் காணப்படும் ஈஸ்ரோஜன் ஓமோனின் விளைவை ஒத்த விளைவை ஏற்படுத்துவதால் ஆண்களில் விந்து கலங்களின் எண்ணிக்கை, விந்து கலங்களின் அசையும் திறன், விந்தின் தரம் இறுதியில் உடலுறவுக்கான விருப்பம் என்பவற்றை பாதிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அண்மைய ஆய்வில் சோயா உணவு பற்றிய ஆய்வு விந்து கலங்களின் அசையும் திறன், விந்து கலங்களின் உருவ அமைப்பு, மற்றும் விந்து பாயத்தின் அளவுடன் தொடர்பை கொண்டிருக்கவில்லை என சொல்லப்படுகிறது.

மேலும் அதிக நிறையுடையவர்களிலும் விந்து கலங்களின் எண்ணிக்கை சாதாரணமானவர்களை விட குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி முடிவு கடந்த மாத விஞ்ஞான/ அறிவியல் ஏடு ஒன்றில் வந்ததாகும். ஆனால் 2005 ஆம் ஆண்டில் இது பற்றி ஒரு அறிக்கை அறிவியல் கூட்டம் ஒன்றில் வாசிக்கப்பட்ட போது அந்த அறிக்கையை நிராகரித்து வட அமெரிக்க சோய உணவு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை இது. இந்த அறிக்கையில் இந்த விடயம் பற்றி எந்த அறிவியல் ஏடுகளிலும் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவில்லை எம்பதும் ஒரு முக்கிய காரணமாக அவர்களால் சொல்லப்பட்டுள்ளது (Fraser’s findings have not been published in a peer reviewed journal) . அண்மைய ஆய்வு முடிவு அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான ஏட்டில் வெளிவந்திருக்கிறது. இதைபற்றி என்ன சொல்லப்போகிறார்கள் என தெரியவில்லை. வட அமெரிக்காவில் ஒரு முக்கிய வியாபார பயிராக விளங்கிவரும் சோயாவினால் வரக்கூடிய பாதகமான விளைவுகள் பற்றி அதிகம் ஆய்வு செய்யப்படாமைக்கு பொருளாதார ரீதியில் பலமான இப்படியான அமைப்புக்களும் காரணமாக இருக்கலாம். ஏன் எனில் சோய உணவின் நன்மைகள் பற்றிய ஆய்வுகளே அதிகம் வெளிவந்து இருக்கிறன/ வெளிவருகிறன.

Labels: , , ,

Sunday, October 21, 2007

உருளைகிழங்கிலும் நஞ்சுண்டு

உருளைகிழங்கிலும் நஞ்சுண்டு என சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? இங்கு நஞ்சு என்று சொல்ல வருவது விவசாயிகள் பயிர்ச்செய்கைக்கு பாவிக்கும் பூச்சிமருந்துகள் (insecticide), பூஞ்சண கொல்லிகள் (Fungicide) பற்றியல்ல. இது இயற்கையாகவே உருளைக்கிழங்கு மற்றும் அதனோடு இணைந்த குடும்பத்தை சேர்ந்த தாவரங்களான தக்காளி, கத்தரி, புகையிலை போன்ற தாவர இனங்கள் தம்மை தாக்கும் பூச்சி பீடைகளில் இருந்தும் நோயை ஏற்படுத்தும் பூஞ்சண இனங்களில் இருந்தும் பாதுகாத்துகொள்ள உருவாக்கும் இயற்கையான பாதுகாப்புச்செயன்முறை.

உருளைகிழங்கு தாவரம் தன்னை பாதுக்காக்க உருவாக்கும் நச்சு பதார்த்ததின் பெயர் சொலானின் (Solanine) எனும் ஒரு கிளைக்கோஅல்கலோயிட்(Glycoalkaloid).

மனிதருக்கு நோயை ஏற்படுத்த மிகச்சிறிய அளவு சொலானின் போதுமானது. 2-5 மில்லிகிராம்/கிலோகிராம் உடல் நிறை எனும் அளவு சொலானின் மனிதரில் நோய் ஏற்படுத்த போதுமானது.
மிக அதிக அளவில் உள்ளெடுக்கப்பட்டால் மரணமும் சம்பவிக்கலாம்.

சொலானினால் பாதிக்கப்படும் உறுப்புக்கள்: சமிபாட்டு தொகுதி, நரம்பு தொகுதி.

நோய் அரும்பு காலம்: 8-12 மணி நேரம். சில நேரங்களில் 30 நிமிடத்தில் கூட அறிகுறிகள் வெளித்தெரியலாம்.

அறிகுறிகள்:
மயக்கம், அல்லது nausea
வயிற்று போக்கு- diarrhea,
வாந்தி- vomiting,
வயிற்று உபாதை- stomach cramps,
தொண்டை எரிவு- burning of the throat,
heart arrhythmia,
தலைவலி -headache
dizziness



உருளைகிழங்கு சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் போது அல்லது மின் விளக்கு ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் போது சொலானின் அதிக அளவில் உருவாகிறது. இது இயற்கையாக மண்ணுக்கு அடியில் இருக்கும் கிழங்கு மண்ணுக்கு வெளியே கொண்டுவரப்படும் போது கிழங்கை உண்ணும் பூச்சிகள், நோய் ஏற்படுத்தும் பூஞ்சணங்களை எதிர்க்க உருளைகிழங்கு மேற்கொள்ளும் வழிமுறை. அத்துடன் பூஞ்சண தொற்று நோய்கள் உருளை கிழங்கு பயிரையோ அல்லது உருளை கிழங்கையோ தாக்கும் போது சொலானின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.

எப்படி நாம் சொலானின் நச்சுபொருள் இருக்கும் உருளை கிழங்கை அறிவது:

பொதுவாக உருளைகிழங்கு சூரிய ஒளிக்கு, அல்லது மின் விளக்கு ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் பொது அதன் மேற்பரப்பு பச்சை நிறமாக மாறும். இது சாதாரணமாக இலைகள், தண்டுகள் போன்றவை கொண்டுள்ள பச்சயம் (chlorophyll) எனும் ஒளித்தொகுப்பிற்கு (photosynthesis) உதவும் ஒரு நஞ்சற்ற, ஒரு பதார்த்தம். பச்சயம் (chlorophyll) உருவாகும் செயன்முறைக்கு சமாந்தரமாக சொலானின் எனும் நஞ்சு பொருள் உருவாக்கமும் நடைபெறும். ஆனால் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்த செயன்முறையல்ல. உருளைகிழங்கு அதிக அளவில் பச்சை நிறமாக இருக்கிறது என்றால் அங்கு சொலானின் என்ற நச்சு பொருளும் அதிக அளவில் இருக்க்கிறது என்றே அர்த்தமாகும். அத்துடன் சொலானின் கொண்ட உருளை கிழங்கு கசப்புச்சுவையை கொடுக்கும். அதே போல உருளை கிழங்கு முளைக்க ஆரம்பிக்கும் போதும் சொலானின் அளவு அதிகரிக்கும்.



பட மூலம்: http://home.cc.umanitoba.ca/





சொலானின் நச்சுபொருள் பொதுவாக நீரில் அவிக்கும் போது அழிவடையாது உருளைகிழங்கில் இருக்கும். எனவே சமைத்த உருளைகிழங்கு கூட பாதுகாப்பானதல்ல.
முழுமையாக எண்ணேயில் மூழ்க செய்து பொரிக்கும் முறையில் சொலானின் அளவு குறைவடையலாம்.

சொலானின் உள்ள உருளை கிழங்கை எப்படி சமைப்பது?

உருளை கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்த பின் உருளை கிழங்கை அவதானித்து பார்க்கவும்.

உருளை கிழங்கு பச்சை நிறமாக இருந்தால் பச்சை நிறம் எவ்வளவுக்கு இருக்கிறதோ அவ்வளவு பகுதியினுடைய மேல் தோல், மற்றும் கிழங்கின் உள்ளே பச்சை நிறம் பரவியிருக்க கூடிய பகுதிகள் அனைத்தையும் வெட்டி அகற்றி பின் சமைக்கவும்.


ஒவ்வாமை (allergy) இருப்பவர்கள் இப்படியான பச்சை நிறமான உருளை கிழங்கை சமைப்பதை தவிர்ப்பது நல்லது.

வீடுகளில் உருளை கிழங்கை ஒளிபடாது பாதுகாத்துவைப்பது அவசியம்.

பூசண தொற்று ஏற்பட்ட உருளை கிழங்கை சமைப்பதை தவிர்த்தல்: சில நேரம் பூசண தொற்று ஏற்பட்டு அழுகிய பகுதியை வெட்டி அகற்றி மிகுதியை சமைப்பவர்கள் அதை முழுமைக்க தவிர்க்க வேண்டும்.

முளைத்த/ முளைஅரும்பிய உருளைகிழங்கை சமைப்பதை தவிர்த்தல்

உசாத்துணை:
http://www.ianrpubs.unl.edu/epublic/pages/publicationD.jsp?publicationId=208

http://www.actahort.org/books/38/38_20.htm
http://en.wikipedia.org/wiki/Solanine

Labels: , , ,

Wednesday, April 25, 2007

உணவில் நார் சத்தின் முக்கியத்துவம்

நல வாழ்விற்கு உணவில் நார்சத்து போதுமான (Dietary fiber) இருப்பது முக்கியமாகும்.

நார் சத்து என்றால்?

உள்ளெடுக்கப்படும் உணவில் சமிபாட்டு தொகுதியில் சமிபாடடையாது மலத்துடன் வெளியேறும் உணவு பகுதி என பொதுவாக வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.

நார் சத்துள்ள உணவு பொருட்கள் தாவர உணவுகளில் அதிகளவு கிடைக்கின்றன. நார்சத்துக்கள் எனும் போது அவை மாப்பொருள் சாராத பல் சக்கரைட்டுக்கள் (non-starch polysaccharides), செலுலோஸ், டெக்றீன்கள், இனுலின், லிக்னின், மெழுகுகள், கைற்றின்,பெக்ரின், பீற்ற குளுக்கான்கள் ( cellulose, dextrins, inulin, lignin, waxes, chitins, pectins, beta-glucans)என பலபல்பகுதியங்களை உள்ளடக்கியதாகும்.


இவற்றை நீரில் கரையும் இயல்பை கொண்டு


1. கரையும் நார்கள் (Soluble fiber)

இவை நீரில் கரைய கூடியவை. இவை குருதியில் கொல்ஸ்திரோல் அளவையும், வெல்ல அளவையும் குறைப்பதில் உதவுகிறன.
பொதுவாக ஓட்ஸ் (Oates), அப்பிள், தோடம் பழம் (orange and Citrus fruits) ,கரட் (Carrot), பார்லி(barley), அவரை குடும்ப பருப்பு வகைகள் (Peas, beans)போன்ற பொருட்களில் அதிகளவு கானப்படுகிறன.

2. கரையாத நார்கள் (Insoluble fiber)
இவை நிரில் கரைவதில்லை. சமிபாட்டு தொகுதியில் உணவு பொருட்கள் அசையும் வேகத்தை கூட்டுவதுடன், மலத்தில் அளவை அதிகரிக்க உதவுகிறன. இதனால் மலச்சிக்கல், ஒழுங்காக மலப்போக்கு இல்லாதவர்கள் (struggle with constipation or irregular stools) நன்மை அடைவார்கள்.

கரையாத நார் பொருட்களை கொண்டுள்ள உணவுகளாக
முழுமையான தானியங்கள் (Whole grains), மரக்கறிகள் என்பவற்றை கூற முடியும்


உடல் நலனிற்கு நார் சத்தின் பங்களிப்பு என்ன?

கரையும் நார்கள்

1. இவை இரைப்பை, சிறுகுடல் (stomach and small intestine) ஆகிய பகுதிகளில் காபோவைதரேற்றுக்கள்(carbohydrates) குளுக்கோஸ் (glucose) ஆக மாற்றப்பாடும் வேகத்தை குறைக்கிறன. இதனால் குருதியில் உணவு உட்கொண்டது ஏற்படும் வேகமான குளுக்கோஸ் அதிகரிப்பை குறைக்கிறன.

2. நார் பொருட்கள் சமிபாட்டு தொகுதியில் நீரை அகத்துறுஞ்சி கூழ் நிலையை ஏற்படுத்துகிறன. சமிபாட்டு செயற்பாட்டை மெதுவாக நடக்க செய்வதுடன், வயிறு நிறைந்தது போல உணர்வை ஏற்படுத்துவதால் அதிகம் உணவு சாப்பிடுவது குறைகிறது. இதனால் தமது எடையை குறைப்பதற்கு முயற்சிப்போர் நார்சத்து மிக்க உணவுக்ளை சாப்பிடுவது பயனளிக்கலாம்.

3. குருதியில் கொலஸ்திரோல் அளவை குறைத்தல் ( reduce blood cholesterol levels)
சமிபாட்டு நார் பொருட்கள் பித்த உப்புக்கள், கொல்ஸ்திரோலை ?(bile acids and cholesterol) பற்றி (binds)வைத்திருப்பதால் சமிபாட்டு தொகுதியில் மீள அகத்துறுஞ்சுவதை தடுக்கிறன. அத்துடன் இவை குருதியில் அடர்த்தி குறைந்த லிப்போ புரதத்துடன் இணைந்த கொல்ஸ்திரோல் (LDL cholesterol) அளவை குறைப்பதால் இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கிறன.



4. புற்று நோயை குறைத்தல் (Colon cancer)

பொதுவாக Colon cancer அதிகளவு நார்சத்துள்ள அதிகம் தீட்டப்படாத தனியங்களை (Whole grain) உட கொள்பவர்களில் குறைவாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கத்தைய நாடுகளில் உள்ள கருது கோளின் படி புற்று நோயை ஏற்படுத்தும் பொருட்கள்(carcinogens)அதிக நேரம் குடற்சுவருடன் தொடுகையுறுமாறு இருப்பதால் அவை குடல் பகுதியில் புற்று நோயை ஏற்படுத்த காரணமாகிறன. ஆனால் நார் பொருட்கள் மலத்தை வேகமாக நகர செய்து மல சிக்கலை போக்குவதால் புற்று நோயை ஏற்படுத்தும் பொருட்கள் அதிக நேரம் குடல் பகுதியில் இருப்பதில்லை இதனால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறன.

கரையும் மற்றும் கரையாத நார்கள்

5. மலச்சிக்கல், மற்றும் மல போக்கில் சிக்கல் உள்ளவர்களுக்கு (struggle with constipation or irregular stools)
இவை சமிபாட்டு தொகுதியில் (digestive system) எந்த வித மாற்றங்களுக்கும் உள்ளாவதில்லை. அவ்வாறு சொல்வதன் அர்த்தம்
உதாரணமாக:நாம் உட்கொள்ளும் உணவு பொருடள் எவ்வாறு சமிபாட்டு தொகுதியில் மாற்றம் அடைகிறது என பார்த்தீர்கள் என்றால்
மாப்பொருள் (Starch): குளுகோஸ் (Glucose)
புரதம் (Protein): அமினோ அமிலங்கள்(Amino acids)
கொழுப்பு (Fat/ oil): கொழுப்பமிலம், கிளிசரோல் (Fatty acid and glycerol)
ஆக மாற்றமடையும்.
பெருங்குடல் (Large intestine)பகுதியின் தொழில் என்ன என பார்த்தோம் என்றால் மேலதிகமான நீரை அகத்துறுஞ்சுவதாகும். ஆனால் உணவு மிக வேகமாக பெருங்குடல் பகுதியை கடந்து செல்லுமாக இருந்தால் நீர் போதுமான அளவு அகத்துறுஞ்சப்படாது வயிற்று போக்கு ஏற்படும். அதே நேரம் மிக அதிக அளவில் அகத்துறுஞ்சப்பட்டால் மலம் மிக இறுக்கமாகி மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும்.
ஆனால் நார் பொருட்கள் இவ்வாறு எந்த மாற்றங்களுக்கும் உள்ளாகாது. இதனால மலத்தின் எடையை அதிகரிக்க செய்கிறன. அத்துடன் நீரை இவை அகத்துறுஞ்சி (absorbs)
வைத்திருப்பதால் மலத்தை மெதுமையாகுகிறன.


ஒரு நாளைக்கு தூய நார் சத்தாக 28-35 கிராம் தேவைப்படுகிறது. நாம் போதுமான அளவு மரக்கறிகளையும், பழங்களையும் உண்டு வந்தால் இந்த அளவை மிக இலகுவில் பெற்று கொள்ள முடியும்.

Friday, April 06, 2007

பார்லி, ஓட்ஸ் சாப்பிட்டு இதய நோயை குறையுங்க

பீற்றா - குளுக்கான்கள் (Beta - glucans): உடல் நலன் சார் பங்களிப்புகள்.





Beta-glucans எனப்படுபவை பல குளுகொஸ் (Glucose) மூலக்கூறுகளினால் ஆக்கப்பட்ட ஒரு பல் சக்கரைட் பசை (Polysaccharide gum ) ஆகும். இயற்கையாக பல தாவரங்களிலும், நுண்ணங்கிகளிலும் காணப்படுகிறது. இது உடல் நலனுக்கு உகந்த ஒரு சமிபாட்டு நார் சத்தாகும் (Dietary fibre).






தற்போதைய நவீன உலகில் நுகர்வோர் பலரும் (அதாவது நாங்களே தான்) உடல் நலனுக்கு உகந்த உணவை தேடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை தானே. அவ்வாறான தேடலுக்கு தீனி போடுபவை செயற்படு உணவுகள் (Functional Foods) எனும் உணவு வகைகளாகும்.
பீற்றா குளுக்கான்ஸ் உம் செயற்படு உணவு வகையை சேர்ந்தவையாகும்.

பீற்றா குளுக்கான்களை கொண்ட உணவுகள்

மதுவம் (Yeast)

இயற்கையான பீற்ற குளுக்கான்கள் ஐ கொண்ட பிரதான 4 இயற்கை மூலங்களில் மதுவம் முக்கியமானதாகும். மற்றைய இயற்கை மூலங்களில் காணப்படுவது போன்று அல்லாமல் இதன் கரையும் தன்மை (insoluble) குறைவாகும். மதுவத்தில் காணப்படும் பீற்றா குளுக்கான்கள் உடலின் நிர்பீடன பாதுகாப்பு (immune defences) சக்திகளை உறுதியாக்குகிறது. இருந்த போதிலும் இதன் கரை திறன் குறைவாக இருப்பதனால் உணவுகளுடனோ அல்லது குடி பானங்களுடனோ கலப்பது சிரமமாகும்.

காளான் (Mushroom)

பல காளான் இனங்களில் பீற்றா குளுக்கான்கள் காணப்பட்டாலும் இது வயிற்று குழப்பங்களை தரக்கூடியதாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இதை தவிர்ப்பது நல்லது.

பார்லி (Barley)

பார்லியில் மிக அதிக அளவில் பீற்றா குளுக்கான்ஸ் இருந்த போதும் இது வரை உணவு/ மருந்து பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை அதிகம் பெறவில்லை. பார்லி பீற்றா குளுக்காங்கள் குருதி கொலஸ்திரோல் அளவை குறைப்பதுடன், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது இதங்கரணமாக தற்போது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை இதனை உணவு தயாரிப்பில் பயன்படுத்த அங்கிகரித்துள்ளது.ஆனால் பார்லி பீற்ற குளுக்காங்கள் உணவின் விருப்பை (Platability) குறைக்க கூடியவை ஆக இருப்பது இதன் பிரதிகூலமாகும்.

ஓட்ஸ் (Oats)

ஓட்ஸ் பீற்ற குளுக்கான்கள் ஓரளவு நீரில் கரைய கூடியதாக இருப்பதால் சமிபாட்டு தொகுதியில் கூழ் நிலை கரைசலை எற்படுத்துவதால் கொலஸ்திரோல் சமிபாட்டு தொகுதியில் அகத்துறுஞ்சலை குறைகிறது. இதன் உடல் கொலஸ்திரோலை குறைக்கும், இதய நோய்களை குறைக்கும் இயல்பு காரணமாக ஐக்கிய இராச்சியம், சுவீடன் ஆக்கிய நாடுகள் இதனை உணவில் சேர்க்க அங்கிகரித்துள்ளன. ஆனால் உடலுக்கு தேவையான அளவு பீற்றா குளுக்காங்களை உள்ளெடுக்க நாளாந்தம் 250 கிராம் சமைக்கப்பட ஓட்ஸ் ஐ உண்ண வேண்டியிருப்பது நுகர்வோரால் அதிகம் விரும்பப்படாத ஒரு அம்சமாகும்.

பீற்றா குளுக்காங்களின் உடல் நலன்சார் பங்களிப்புகள்


பிரதானமாக இதய நோய்களை குறைத்து இதய நலன் பேணலில் முக்கிய பங்கு வகிக்கிறது. பீற்றா குளுக்கான்கள் சிறுகுடலில் (small intestine) இல் ஒரு கூழ் நிலை கரைசலை ஏற்படுத்துவதுடன், சிறுகுடல் உட்பரப்பில் ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறன. இதனால் பித்த அமிலங்கள் (bile acid)மீளவும் குடலில் அகத்துறுஞ்சப்படுவதை தடுக்கிறன. பித்த அமிலங்கள் அகத்துறுஞ்சப்படாது மலத்துடன் வெளியேற்றப்படுகிறன.
மேலும் இந்த கூழ் நிலை கரைசல் வெல்லங்ளின் (காபோவைதரேற்றுக்கள்- carbohydrates)அகத்துறுஞ்சலை குறைப்பதுடன் இன்சுலின் (insulin)சுரப்பையும் கட்டுப்படுத்துகிறன. இதனால் ஈரலில் (liver) கொலஸ்திரோல் (cholesterol)உருவாக்கத்தை குறைக்கிறன.

குருதியில் அதிகரித்த குறைந்த அடர்த்தி உடைய லிப்போபுரத கொலஸ்திரோல் (LDL-cholesterol)இதய நோய்களுக்கு காரணமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே கொலஸ்திரோல் அகத்துறுஞ்சலை சிறுகுடல் பகுதியில் குறைப்பதால் இதய நோய்கள் குறைவடைவதற்கு காரண்மாக இருக்க முடியும்.

இதய நலனுகு அடுத்த முக்கிய ஒரு உடல் நலன் சார் பங்களிப்பாக உடலின் நிர்பீடன தொகுதியை (immune system) தூண்டுவதை குறிப்பிடலாம். உடலின் நிர்பீடன தொழிலை செய்யும் கலங்கள் (cells) பீற்றா குளுக்கான்களை உணரும் வாங்கிகளை (recepters)கொண்டிருக்கிறன. பீற்றா குளுக்கான்களை இக்கலங்கள் காணும் போது ஒரு பூட்டு-திறப்பு வகை பொறிமுறையால் இணைத்து கொள்கிறன. இந்த கலங்கள் பீற்ற குளுக்கான்களை உடலில் ஊடுருவல் செய்யும் பிற பொருட்களாக உணர்ந்து உடலின் நிர்பீடன செயற்பாட்டை/ நோய் எதிர்ப்பு செயற்பாட்டை தூண்டுகிறன. இதன் காரணமாக உடலின் நிர்பீடன செயற்பாட்டு சங்கிலி தொடர் தூண்டப்படுகிறது.

இவ்வாறான நிர்பீடன செயன் முறையின் தூண்டல் புற்று நோயை(Cancer) எதிர்ப்பதில் உதவுவதுடன் எயிட்ஸ் நோயின் அறிகுறிகளை குறைப்பதிலும் உதவுதாக சொல்லப்படுகிறது. ஆயினும் இவை தொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் தேவையாக இருக்கிறன.


ஓட்ஸ் (Oats) இன் உடல் நலன் சார் சாதகமான இயல்புகள்.

குருதியின் வெல்ல அளவை குறைத்தல் (Reducing blood sugar levels)

மாப்பொருள்/ வெல்ல உணவு உட்கொண்ட பின் உடலில் ஏற்படும் கிளைக்காமிக் விளைவை (Glycaemic response)பீற்றா குளுக்கான்கள் குறைக்கிறன. உதாரணமாக 1 கிராம் பீற்றா குளுக்கான்கள் ஒவ்வொரு 50 கிராம் மாப்பொருள்/ வெல்ல உணவுடன் உள்ளெடுக்கப்படும் போது கிளைக்காமிக் சுட்டி (Glycamic index) 4 புள்ளிகளால் குறைவடைகிறது. எனவே சலரோகம்/ சர்க்கரை வகை 2 வியாதி உள்ளவர்களுக்கு இது சிறப்பான ஒரு தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.

உடல் நிறையை கட்டுப்படுத்தல்

ஓட்ஸ் கொண்ட உணவை காலையில் உட் கொள்ளும் போது நீண்ட நேரம் சக்தியை கொடுப்பதுடன், விரைவில் பசி ஏற்படுவதை குறைக்கிறது. இதனால் தேவைக்கு அதிக உணவு உட்கொள்வது குறைகிறது.




எனவே நல்ல உணவுகளை உட்கொண்டு உடல் நலனை எல்லாரும் கவனித்து கொள்ளுங்கள்.


Saturday, February 24, 2007

பால் புரதங்கள் ( Milk proteins and peptides)

பால் புரதங்கள், பெப்ரைட்டுக்கள் (Proteins and Prptides) ஆகியவற்றின் உடல் நலன் சார்ந்த பங்களிப்புக்கள்






பால் புரதங்கள், பொதுவாக மனிதனுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் (Essential Amino Acids), நைதரசனுக்கான மூலமாக கருதப்படுவதோடு, உணவுப்பொருட்களை தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளாகவும் இருந்து வருகிறது. ஆனால் தற்போது பால் புரதங்களும், அவற்றோடு இணைந்த பெப்ரைட்டுக்களும் தொழிற்படு உணவுகளாக (Functional Foods) கருதப்படுவதால் முக்கியத்துவமானவையாக கருதப்படுகிறன.


பால் புரதங்களின் வகைகள்


பசுப்பாலில் இரண்டு உள்ள புரதங்களை பிரதானமாக இரண்டு வகையாக பிரிக்க முடியும்.


1. கேசின் (Caseins)


2. Whey proteins


மொத்த பால் புரதங்களில் கேசின் புரதப்பகுதி 76-86% ஆகவும், Whey proteins 14-24% ஆகவும் இருக்கிறன. மேலும்


கேசின் புரதமானது அல்பா, பிற்றா, காப்பா கேசின்கள் என வகைப்படுத்தப்படும்.



அதே போன்று Whey proteins


Lactalbumin


Lactoglobulin


Bovine serum albumin


Immunoglobulins


ஆகிய புரதங்களை பிரதானமாகவும்


Lactoferrin


Transferrin


Lactoperoxidase


Lysozymes


ஆகிய புரதங்களை சிறிதளவிலும் கொண்டது.


பால் புரதங்களில் காணப்படும் ஒவ்வாமை (Allergy) ஏற்படுத்தும் இயல்புகள்


பால் புரதங்கள் சில பேருக்கு, குறிப்பாக சிறுவர்களுக்கு பால் அருந்தியதன் பின் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.


இதனை ஆங்கிலத்தில் Cow's milk protein allergy என அழைப்பர்.


பால் புரத ஒவ்வாமையால்


தீவிரமற்ற ஒவ்வாமை வெளிப்பாடுகளாக


Rhinitis


Diarrhoea என்பவற்றையும்


மிக தீவிரமன ஒவ்வாமை வெளிப்பாடுகளாக


Asthma


Dermatitis


Anaphylactic shock ஆகிய வற்றையும் சொல்ல முடியும்.


இவ்வாறான ஒவ்வாமை வெளிப்பாடுகள் பாலை அருந்திய உடனடியாக வெளிப்படுத்த படாமல், சிறிது சிறிதாக உடலில் அபிவிருத்தியடைய முடியும். அதாவது நாளாந்தம் பால் பருக பருக உடல் அதை எதிர்ப்பதற்காக எதிர் விளைவுகளை படிப்படியாக உருவாக்கி, இறுதியில் ஒவ்வாமையாக வெளிப்படலாம்.


Casein, lactalbumin, lactoglobulin ஆகிய புரதங்களே ஒவ்வாமை ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது.


பொதுவாக குழந்தைகளில் 2-3% ஆனவர்களுக்கு இவ்வாறான சிக்கால் ஏற்பட முடியும்.



பால் புரதங்கங்களில் காணப்படும் புற்று நோய்க்கு எதிரான (Anti-cancer) இயல்புகள்


அதிக கொழுப்பை (fat)கொண்ட உணவுகள், குறைந்த நார் (fibre)சத்துக்களை கொண்ட உணவுகள், குறைந்த அளவு நுண்ணூட்டச்சத்து (micronutrients) கொண்ட உணவுகள் என்பன புற்று நோய் ஏற்பட காரணமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.குறிப்பாக குதப்புற்று நோய் (colorectal cancer ) ஏற்படுவதற்கு.


விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் பால் புரதங்கள் புற்று நோய் கட்டிகள் (Tumour) உருவாவதை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Whey protein எலிகளில் புற்று நோய் ஏற்படுவதை குறைப்பது அறியப்பட்டுள்ளது.


Bovine serum albumin, lactalbumin என்பன மனிதரில் மார்பக புற்று நோயை குணமாக்குவதாக அறியப்பட்டுள்ளது.



பால் புரதங்களில் காணப்படும் உயிர் தொழிற்பாட்டு (bio-active) பெப்ரைட்டுக்கள்


பாலில் காணப்படும் உயிர் தொழிற்பாட்டு பெப்ரைட்டுக்கள் நுண்ணுயிர் எதிரிகளாக (anti microbial), நிர்ப்பீடன சீராக்கிகளாக (immunomodulatory), உயர் குருதியழுத்ததை (hypertension)குறைப்பனவாக, கனியுப்புக்களை பற்றி (mineral binding) வைத்திருக்கும் ஊடகங்களாக தொழிற்படுகிறன.



நிர்பீடன சீரக்கி (immunomodulatory) புரதங்களும், பெப்ரைட்டுக்களும்


மனிதன் நிர்பீடன தொகுதியானது (immune system) மனிதனை தொற்றுக்களில் (infection) இருந்து காப்பதிலும், புற்று நோயை எதிர்ப்பதிலும் பங்காற்றுகிறது.


நிர்பீடனத்தொகுதியில் ஏற்படும் குறைப்பாடு, மனிதனை இலகுவில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் சாத்தியப்பாட்டை அதிகரிக்கிறது.


பால் புரதங்களும், அவற்றின் நொதித்தலால் உருவான பெப்ரைட்டுக்களும் மனிதனின் நிர்பீடன தொகுதியை தூண்டுவது அறியப்பட்டுள்ளது. பால் புரதங்கள் உடலில் காணப்படும் Macrophages எனும் கலங்களின் தொழிற்பாட்டை தூண்டுவது அறியப்பட்டுள்ளது. இக்கலங்கள் உடலில் நுளையும் பிற பொருட்கள், நுணங்கிகள் என்பவற்றை அழிக்கிறன.